Com. SRINIVASA RAO

 





















Com. SRINIVASA RAO

.

Communist Party of India (Marxist) - Puducherry


இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) > ஆவணங்கள் > கட்டுரைகள் > மாவீரன் தோழர் பி.சீனிவாசராவ்

மாவீரன் தோழர் பி.சீனிவாசராவ்

CPIM PuducherryNo comment


1907 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10 ம் தேதி தென் கர்நாடகாவில் சீனிவாசராவ் பிறந்தார். இளம் வயதிலேயே அவரின் தந்தை காலமானார். அவரின் தாய் மாமா மாவட்ட துணை நீதிபதியின் வீட்டில் வளர்ந்தார்.


இவர் இண்டர்மீடியட் படித்து கொண்டிருந்த போது 1920 ம் ஆண்டு கல்கத்தாவில் கூடிய காங்கிரஸ் மாநாடு அரசு பதவிகளை இந்தியர்கள் துறக்க வேண்டும் மாணவர்கள் அரசாங்க கல்வி நிலையங்களை விட்டு வெளியேற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியது. அதை ஏற்று கல்லூரியிலிருந்து வீட்டில் இருந்தும் வெளியேறினார். பல வேலைகளை பார்த்தார். சிங்கப்பூர் சென்று திரும்பி சென்னை வந்தவர் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டார். 1930 ல் சென்னையில் அன்னிய துணி கடை எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு 6 மாதம் சிறைத் தண்டனை பெற்று சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் தோழர் அமீர்கான் அவர்களை சந்தித்தது அவர் வாழ்வில் மாற்றம் ஏற்பட்டது. அமீர்கான் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை புத்தகத்தை கொடுத்து படிக்க வைத்தார்.


1936 ல் சென்னையில் முதல் கம்யூனிஸ்ட் கட்சி கிளை துவக்கப்பட்டது. தோழர்கள் பி.ராமமூர்த்தி,

ஜீவா,சீனிவாசராவ் ஏ.எஸ்.கே., சி.எஸ்.

சுப்ரமணியம் கே.முருகேசன், டி.ஆர்.

சுப்ரமணியன்,

சி.பி.இளங்கோ மற்றும் திருத்துறைப்

பூண்டி முருகேசன் ஆகியோர் அடங்கிய கட்சி கிளை துவக்கப்பட்டது.


திருச்செங்கோடு டாக்டர் பி.சுப்புராயன் இல்லத்தில் முதல் மாநிலக்குழு தேர்வு செய்யப்பட்டது. மாநில செயலாளராக மோகன் குமாரமங்கலம் தேர்வு செய்யப்பட்டார். எம்.ஆர்.வெங்கட்ராமன் மாநில உதவி செயலாளராகவும் மாநிலக்குழு உறுப்பினர்களாக பி.ராமமூர்த்தி, பி.சீனிவாசராவ் ஜீவா,எம்

கல்யாணசுந்தரம்,

சி.எஸ்.சுப்ரமணியம் ஆர்.கே.கண்ணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். அந்தக்

கட்டத்தில் குத்தகை விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களை திரட்டும் பணியை ஏற்பதாக சீனிவாசராவ் தாமே முன்வந்து ஏற்றுக் கொண்டு தஞ்சை வந்தார். அப்போது தஞ்சையில் 12 லட்சம் ஏக்கர் நிலம் சாகுபடி செய்யப்பட்டு வந்தது. வலிவலம் தேசிகர்,

தியாகராஜ முதலியார் குன்னியூர் சாம்பசிவ ஐயர், பூண்டி வாண்டையார், உக்கடை தேவர்,மூப்பனார்,

ஜமீன்தார்கள் வசம் பல இலட்சம் ஏக்கர் நிலம் இருந்தது. பாக்கி நிலம் முழுவதும் மடம்,கோவில் அறக்கட்டளைக்கு சொந்தமாக இருந்தது.


1942 ல் தஞ்சை வந்த சீனிவாசராவ் தஞ்சை மாவட்டம் முழுவதும் சுற்றிப் பார்த்தார். லட்சக்கணக்கான ஆண்களும் பெண்களும் பண்ணை அடிமைகளாக இருந்தனர். அவர்களின் வாழ்நிலை விலங்குகளுக்கும் கீழாக இருந்தது. அதிகாலை 4 மணிக்கு கொம்பு ஊதியதும் ஏர் மாட்டை அவிழ்த்துக் கொண்டு வயலில் இறங்குபவர்கள் காலை 11 மணிக்கு கஞ்சியை குடித்து விட்டு மீண்டும் வேலைக்கு திரும்புவார்கள். இரவு 7,8 மணிக்கு தான் ஆண்களும்,

பெண்களும் வீடு திரும்ப முடியும். உடல்நிலை சரியில்லை என்றாலோ சிறிய தவறுகள் செய்தலோ பண்ணை அடிமைகளை மரத்தில் கட்டி வைத்து சாட்டையால் அடிக்கப்

படுவார்கள். 5 பிரி கொண்ட சாட்டையால் கூரான கற்கள் சொருகி இருக்கும். அடித்தால் சதை பிய்த்துக் கொண்டு இரத்தம் கொட்டும். பின்பு சாணிக்கரைசலை பலவந்தமாக வாயில் ஊற்றுவார்கள். அடிபடும் போது வாய் திறந்து அழக்கூடாது. இப்படி ஒரு தண்டனை உலகில் எந்த நாட்டிலும் இது போன்ற நிலை இல்லை. பண்ணை அடிமைகளின் குழந்தைகள் படிக்க கூடாது. பண்ணையில் தான் வேலை செய்ய முடியும். வீட்டில் திருமணம் என்றாலும் பண்ணையாரின் அனுமதி வேண்டும். இந்த கொடுமைகளை எல்லாம் தஞ்சையை சுற்றி பார்த்து சீனிவாசராவ் தெரிந்து கொண்டார்.


களப்பால் கிராமத்தில் தோழர் குப்புசாமி தலைமையில் சீனிவாசராவுக்கு வரவேற்பு அளிக்கப்பட்ட நிகழ்ச்சியில் வீர வேஷமாக தொழிலாளர்களை பார்த்து நீங்களும் மனிதர்கள் தான் பண்ணையார்களும் மனிதர்கள் தான் உங்களுக்கு இரு கைகள் உள்ளது. அடித்தால் திருப்பி அடி சூரியன் உதயம் ஆன பின்பு வேலைக்கு போ,சூரியன் மறையும் முன்பு வீட்டுக்கு போ.வயலில் வேலை செய்யும் போது குழந்தை அழுதால் தரையில் குழந்தைக்கு பால் கொடு உழைப்புக்கு ஏற்ற ஊதியம் பெறு எதுவானாலும் நான் இருக்கிறேன். சங்கம் உங்களை பாதுகாக்கும் என்றார். இந்த உரை அந்த மக்களுக்கு ஆவேஷத்தை ஊட்டியது.


வடபாதிமங்கலம் கிராமத்தில் 4000 பேருடன் சென்று காவல்துறை எச்சரிக்கையை மீறி செங்கொடி ஏற்றினார். மன்னார்குடி,

தென்பரை,

உத்திராபதி மடத்திற்கு 2000 ஏக்கர் நிலம் இருந்தது. விவசாயிகளை திரட்டி சங்கம் அமைத்து தென்பரை குத்தகை விவசாயிகள் பிரச்சனைக்கு மன்னார்க்குடி ஒப்பந்தம் ஏற்பட வழி செய்தார். சாட்டையடி சாணிப்பால் கொடுமைக்கு ஒப்பந்தம் மூலம் தீர்வுக் கண்டார்.


1952 ம் ஆண்டு மார்ச் மாதம் சென்னையில் கைதுச் செய்யப்பட்டார். ஏப்ரல் 15 ல் விடுதலை ஆன பின்பு தஞ்சை திரும்பினார். தஞ்சை மாவட்டம் முழுவதும் மிகச் சிறப்பான வரவேற்புக் கொடுக்கபட்டது. நாகை கீவளூர் வரவேற்பு கூட்டத்தில் 40000 பேர் கலந்து கொண்டனர். பண்ணையாள் பாதுகாப்பு சட்டம் கோரி மிக பிரமாண்டமான போராட்டங்களை நடத்தினர். 1952 ஆகஸ்டில் திருத்துறைப்பூண்டியில் 2 லட்சம் பேர் கலந்து கொண்ட நில வெளியேற்ற எதிர்ப்பு போராட்டங்களை நடத்தினார். நில சீர்திருத்த சட்டம்,

பண்ணையாள் பாதுகாப்பு சட்டம் அரசால் கொண்டு வரப்பட்டது.


நில சீர்த்திருத்தம் கோரி 1960 ம் ஆண்டு சீனிவாசராவ் தலைமையில் மதுரையிலிருந்தும் சென்னை நோக்கி நடைபயணம் நடைபெற்றது. நடைபயணம் குழு 600 கி.மீ தூரம் கடந்து செப்டம்பர் 2 ம் தேதி சென்னை நகருக்குள் நுழைந்தது. மக்கள் மகத்தான வரவேற்பு அளித்தனர். அடுத்த கட்டமாக மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது. 1961 செப்டம்பர் 15 அன்று மறியல் போராட்டம் துவங்கியது. 15 நாள் நீடித்த மறியலில் 16000 பேர் சிறை சென்றனர். சிறையில் வல்லுவக்குடி பெருமாள் பட்டுக்கோட்டை,

மன்னாங்காடு மாரி பரமக்குடி குப்புசாமி திண்டுக்கல் கண்டம

நாயக்கன்பட்டி தவசி தேவர் ஆகிய 4 மறியல் தோழர்கள் உயிர் துறந்தனர். இது சீனிவாசராவ் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளானர். மாவட்டம் முழுவதும் சென்று மறியல் போராட்டத்தை விரைவுபடுத்தினர். இந்த நேரத்தில் அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டது. ஆஸ்துமா அவரை வாட்டி வதைத்தது. 1961 செப்டம்பர் 29 தேதி இரவு தஞ்சை கட்சி அலுவலகம் வந்த அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிர் பிரிந்தது. தஞ்சையிலிருந்து அவர் உடல் திருத்துறைப்

பூண்டி கொண்டு செல்லப்பட்ட போது பல்லாயிரக்கணக்கான மக்கள் வழி நெடுக அஞ்சலி செலுத்தினர். செப்டம்பர் 30 ம் தேதி திருத்துறைப்

பூண்டி முள்ளி ஆற்றங்கரையில் அவர் உடல் அடக்கம் செய்யபட்டது. இறுதி நிகழ்ச்சியில் 25000 பேர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். பி.எஸ்.ஆர் மறைவின் போது சிறையில் இருந்த 16000 மறியல் தொண்டர்கள் ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்து அஞ்சலி செலுத்தினர். 54 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்து உழைப்பாளி மக்களுக்காக தன் வாழ்வை அர்பணித்தவர். தஞ்சை மாவட்டத்தில் அடிமைபட்டு கிடந்த பண்ணை அடிமைகளை தட்டி எழுப்பி பண்ணை அடிமைத்தனத்திற்கு முடிவு கட்டியவர். கீழத் தஞ்சையில் நில குவியலை உடைத்து தரை மட்டம் ஆக்கியவர். உழைப்பாளி மக்களின் ஒப்பற்ற தலைவராக வாழ்ந்து மறைந்தவர்.


செவ்வணக்கம்.


தஞ்சை கே.பக்கிரிசாமி










Popular posts from this blog

ELON MUSK ON INDIA TODAY

SAVARKAR-BOOK-FULL

ANJALAI AMMAL